Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உறுதித்திட்டமாக (புதுமைப்பெண் திட்டம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயபடிப்பு, பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்விப பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- (ரூபாய் ஆயிரம்) அவரவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு இதுவரை நமது மாவட்டத்தில் 12,009 மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
தற்போது 2023 - 24 கல்வி ஆண்டிற்கு அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெற செப்டம்பர் 4ந் தேதி முதல் இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. எனவே, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து முடித்து இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் தகுதிவாய்ந்த மாணவிகள் தங்களது கல்வி நிறுவனம் மூலமாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இணையதளத்தில் சரியான முறையில் விண்ணப்பித்தல், வங்கிக்கணக்குடன் ஆதார் இணைத்து இருத்தல் சரிபார்த்தல், இணையதளத்தில் உள்ள குறைபாடுகள் களைதல், மாணவிகள் மேல்முறையீடு செய்தலுக்கான வழிகாட்டுதல், உதவித்தொகை விடுபட்ட மாணவிகள் தகவல் பெறுதல் மற்றும் கல்லூரி பொறுப்பு அலுவலர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தல் குறித்து கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள 146 கல்லூரிகளின் பொறுப்பு அலுவலர்கள், முதுநிலை ஆலோசகர் (புதுமைப்பெண் திட்டம்), மின் ஆளுமை மேலாளர், பள்ளி கல்வித்துறை, முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் தபால்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.